இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது.
இந்த சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயா சென்றடையும்.
வழியில் கொல்கத்தாவில் உள்ளூர் சுற்றுலா, காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி பூரியிலுள்ள பிமலாதேவி போன்ற 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கொனார்க் சூரியநாதர் கோவில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து கடைசியாக விஷ்ணு பாதத்தை தரிசித்து மதுரை திரும்பும்படி 13 நாட்கள் சுற்றுலாவை ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
கட்டணம்
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, தங்குமிட கட்டணம், பயண காப்பீடு உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 12,885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகளை www.irctctourism.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மதுரை அலுவலக எண் 8287931977 ஐ தொடர்பு கொள்ளலாம்.
இரண்டு தடுப்பு ஊசிகள் செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலாவில் அனுமதிக்கப்படுவர்.
Tags
Special Trains